சென்னையில் இருந்து 1 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதல் நாளில் சென்னையில் இருந்து 1 லட்சம் பேர் அரசு பஸ்களில் சொந்த ஊர்களுக்கு சென்றனர்

தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் சொந்த ஊருக்கு செல்பவர்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் இருந்து நாளை (13-ந்தேதி) வரை 9,510 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மேலும் 5,247 பஸ்கள் மற்ற பகுதிகளில் இருந்தும், சிறப்பு பஸ்களாகவும் இயக்கப்படுகின்றன. மொத்த 3 நாட்களில் 14 ஆயிரத்து 757 பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று முதல் நாளில் சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

முதல் நாளான நேற்று வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரம் பஸ்கள் தவிர கூடுதலாக 225 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. மாலை 4 மணி முதல் பயணிகள் வரத்தொடங்கினார்கள். இரவு 11 மணி வரை பயணிகள் கூட்டம் இருந்தது. நேற்று முதல் நாளில் சென்னையில் இருந்து 1 லட்சம் பேர் அரசு பஸ்களில் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

இது கடந்த ஆண்டை விட 35 சதவீதம் குறைவு ஆகும். நேற்று முதல் இன்று காலை 8 மணி வரை 1 லட்சத்து 16 ஆயிரத்து 31 பேர் சென்றுள்ளனர். இன்றும், நாளையும் அதிகளவில் பயணிகள் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றும், நாளையும் சொந்த ஊருக்கு செல்ல இதுவரை 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.