தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வில் 100% மாணவ-மாணவிகள் தேர்ச்சி

கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெற இருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத இருந்த மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், வருகைப்பதிவேட்டின் அடிப்படையிலும் மதிப்பெண் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்தது.

இந்நிலையில் தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வில் 100% மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு தேர்வுக்கு பதிவு செய்திருந்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

10ம் வகுப்பு மாணவர்கள் 9,39,829 பேர் தேர்ச்சி என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 10ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் 4,71,759, மாணவிகள் 4,68,070 தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு தேர்வு எழுதுவதற்காக பதிவு செய்த மாற்றுத்திறனாளிகள் 6,235 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 52,741 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வேலூரில் 50,916 மாணவர்களும், சென்னையில் 49,235 மாணவர்களும், திருவள்ளூரில் 48,950 மாணவர்களும், விழுப்புரத்தில் 46,494 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் சென்று தங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து மதிப்பெண் விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம்.