திருப்பதியில் கொரோனாவிலிருந்து மீண்ட 101 வயது மூதாட்டி

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக 13.85 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா காரணமாக இதுவரை 32,063 பேர் பலியாகி உள்ளனர். இதனால் நாட்டில் உயிரிழப்பு விகிதம் 2.3 சதவீதமாக உள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 8,85,577 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடையும் விகிதம் 63.9 சதவீதமாக உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும், கொரோனாவிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த மங்கம்மா என்ற மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்பின் அவர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர மருத்துவ கவனிப்பில் இருந்த அவர், தன்னம்பிக்கையுடன் சிகிச்சைக்கு போதிய ஒத்துழைப்பு கொடுத்ததன் காரணமாக, அவர் குணமடைந்து, நேற்று வீடு திரும்பினார். இதனால் டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். 101 வயதிலும் தைரியமாகவும் தளராத நம்பிக்கையுடன் அவர் இருந்ததாக மருத்துவ கண்காணிப்பாளர் கூறினார்