ஈராக் நாட்டில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதல் - 11 பேர் உயிரிழப்பு

ஈரான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஐஎஸ், அல்கொய்தா, தலிபான் உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத குழுக்கள் பொதுமக்கள் மீதும் பாதுகாப்பு படையினர் மீதும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருவதால், இந்த குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையாக ஈரான் பாதுகாப்பு படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். அரசுப்படையினருக்கு ஆதரவாக ஆயுதம் தாக்கிய பல குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினரும் ஈராக் நாட்டில் தங்கள் படைத்தளங்களை அமைத்து பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். இதனால், பயங்கரவாத குழுக்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் தலைநகரான பாக்தாத்தில் உள்ள விமான நிலையம் அருகே அல் ரட்வானியா என்ற பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் அரசு ஆதரவு படையினர் சோதனைச்சாவடிகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனைச்சாவடிக்கு இன்று பயங்கர ஆயுதங்களுடன் காரில் வந்த ஐஎஸ் பயங்கரவாதிகள் சிலர் அரசு ஆதரவு படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.

துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். தாக்குதலில் படுகாயமடைந்த அரசு ஆதரவு படையினருக்கு உதவச்சென்ற பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. பயங்கரவாதிகள் நடத்திய இந்த கோர தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 5 பேர், பொதுமக்கள் 6 பேர் என மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.