பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் 1,800 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம்

நைஜீரியா: நைஜீரியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு காதலர்கள் தங்கள் திருமணத்திற்கான செலவுகளை கூட மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதன் காரணமாக அந்நாட்டு அரசு மற்றும் உள்ளூர் அரசு அமைப்புகள் இணைந்து பல ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 13-ம் தேதி வட நைஜீரியாவில் உள்ள கனோ மாகாணத்தில், அரசு சார்பில் பிரம்மாண்ட திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 1,800 மணமக்கள் திருமணம் செய்துகொண்டனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மணமக்களில் ஒருவரான யூசும் அப்துல்லா, அடிப்படை வாழ்விற்கான செலவுகளையே மேற்கொள்ள முடியாத சூழலில் அதனாலே இதுநாள் வரை திருமணம் செய்துகொள்ளாமல் தவிர்த்து வந்ததாக கூறியுள்ளார்.

பெண்ணிற்கு வரதட்சனை கொடுத்து திருமணம் செய்து கொள்வது என்பது பெரும்பாலான ஆண்களால் இயலாத காரியம் என்பதாலேயே அரசும் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து இந்த திருமணத்தை நடத்தி வைக்கிறது.

மேலும், நைஜீரியாவில் வீட்டின் பொறுப்புகளை ஆண்களே முழுவதும் சுமக்கும் நிலையில், அரசு திருமண ஏற்பாட்டில் கலந்து கொள்வோருக்கு தனியார் அமைப்புகளின் உதவியுடன் பெண்களுக்கு தொழிற்கல்வி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் அவர்களால் தங்கள் குடும்பத்திற்கு உதவ முடியும் என்று பயிற்சி அளிக்கும் தன்னர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.