இந்தியாவில் கொரோனாவால் ஏற்படும் 2 லட்சம் இறப்புகளை தடுக்க முடியும் என ஆய்வில் தகவல்

இந்தியாவில் ஜனவரியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி இந்தியாவில் முதல் உயிரிழப்பை ஏற்படுத்தியது. 8 மாத காலத்தில் இங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 65 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், அமெரிக்காவில் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் ஒரு ஆய்வை நடத்தி உள்ளது.

இந்த ஆய்வில், இந்திய மக்கள், பொது சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் முக கவசத்தை அணிந்து வரவேண்டும், தனி மனித இடைவெளியை பின்பற்றி வரவேண்டும். ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர்ந்து தளர்த்தி, முக கவசம் அணிவது தற்போதைய அளவில் இருந்தால் டிசம்பர் 1-ந் தேதிக்குள் இந்தியாவில் 4 லட்சத்து 92 ஆயிரத்து 380 இறப்புகளை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பரவலாக முக கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை பின்பற்றுதல் ஆகிய கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகிறபோது, டிசம்பர் 1-ந் தேதிக்குள் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா உயிரிழப்புகளை தடுக்க முடியும். டிசம்பர் 1 வரை இந்தியாவில் கொரோனாவால் 2 லட்சத்து 91 ஆயிரத்து 145 பேர் இறக்ககூடும் என எதிர்பார்க்கலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த ஆய்வு முடிவு பற்றி அரியானா அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கவுதம் மேனன் கூறுகையில், முக கவசம் அணிவதும், தனி மனித இடைவெளியை பின்பற்றுவதும், நோய் தாக்கத்தின் முன்னேற்றத்தை கணிசமாக குறைக்கும் என்பது உண்மை என்று தெரிவித்துள்ளார்.