விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 73 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 5 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. நேற்று புதிதாக 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,90,936 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை தினமும் 3,300 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதன் விவரம் தெரிவிக்கப்பட வில்லை.

விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 14 ஆயிரத்து 690 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு முகாமில் 4 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 94 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 73 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட நிர்வாகம் மிகக் குறைந்த அளவில் மருத்துவ பரிசோதனை செய்து வரும் நிலையில் அதனை பற்றிய விவரங்களையும் சரியாக தெரிவிப்பதில்லை. இதன் காரணமாக தினசரி மருத்துவ பரிசோதனைகளின் எண்ணிக்கை மற்றும் அதன் முடிவுகளையும் தாமதம் இன்றி தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.