கச்சத்தீவு அருகே 28 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது

நிவர் மற்றும் புரெவி புயல் எச்சரிக்கை காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராமேசுவரத்திலிருந்து மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தற்போது மீனவர்கள் வழக்கம் போல கடலுக்கு சென்று வருகின்றனர். நேற்று காலை ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்திலிருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

மீனவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஐந்து ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் வந்தனர். இலங்கை கடல் பகுதிக்குள் வந்து மீன்பிடித்ததாக கூறி நான்கு விசைப்படகுகளையும், இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

பின்னர் அந்த விசைப்படகுகளில் இருந்த 28 மீனவர்களையும் கைது செய்து, இலங்கையின் நெடுந்தீவுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். நான்கு விசைப்படகுகளும் அங்கு கொண்டு செல்லப்பட்டன.

ராமேசுவரத்தைச் சேர்ந்த 28 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக மீனவர்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.