தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு அதிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்றும் (ஆகஸ்ட் 2) மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை தொடர்ந்து நாளை (ஆகஸ்ட் 3) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். லட்சத்தீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோர பகுதிகள், மாலத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அதிகபட்சமாக 23 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.