ஒரே நாளில் 3 மடங்காக அதிகரிப்பு: செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் உயர்வு

சென்னை: நீர்வரத்து உயர்வு... சென்னை புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் 3,138 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 24 அடியாக இருந்த ஏரியின் நீர்மட்டம் தற்போது 22.07 அடியாக உயர்ந்துள்ளது. ஏரியில் இருந்து குடிநீருக்காக 104 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 25 கன அடி உபரி நீர் திறந்து விடப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 162 கன அடியில் இருந்து 451 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேலும் பில்லூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்துள்ளது. இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 35 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 3 மணி நேரத்தில் கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும், சிவகங்கை, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.