தமிழகத்திற்கு ரூ.4,825 கோடி ஜிஎஸ்டி மூன்றாம் தவணை விடுவிப்பு

புதுடில்லி: ஜிஎஸ்டி தவணை விடுவிப்பு... நடப்பு நிதியாண்டுக்கான மூன்றாவது தவணை வரிப்பகிர்வாக தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரத்து 825 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

மத்திய அரசு வசூலிக்கும் மொத்த வரி வருவாயில் 41 சதவீதம் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இவை நிதியாண்டிற்கு 14 தவணைகளாக மாநில அரசுகளுக்கு வழங்கப்படுகிறது.

அதன்படி, 3ஆவது தவணை வரிப்பகிர்வாக 28 மாநிலங்களுக்கு மொத்தம் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 280 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

அதிகபட்சமாக உத்தர பிரதேசத்திற்கு 21 ஆயிரம் கோடி ரூபாயும், பீகாருக்கு 11 ஆயிரத்து 800 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.

மாநிலங்களின் மூலதன செலவினங்களை உயர்த்தவும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பான செலவுகளுக்கு நிதி அளிக்கும் வகையிலும் இந்த தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.