பங்களாதேஷில் 5 பேருக்கு மரண தண்டனை விதிப்பு

மரண தண்டனை விதிப்பு... 2012இல் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பாக, பங்களாதேஷ் நீதிமன்றம் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான முறைகேடு வழக்குகளைக் கையாள்வதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு தீர்ப்பாயத்தால் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் இவ்வாரம் துஷ்பிரயோகம் தொடர்பான மரண தண்டனையை அறிமுகப்படுத்தியதன் பின்னர் வழங்கப்பட்ட முதலாவது தண்டனை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

2012இல் குறித்த சிறுமியை, அவரது காதலன் ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றதுடன், காதலனின் இரண்டு நண்பர்களும் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர். அத்துடன், வேறு இருவர் அவர்களுக்கு உதவியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த ஐவரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர் என வழக்கறிஞர் அஹமது தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பங்களாதேஷில் பாலியல் துஷ்பிரயோகங்களில் மூன்று வீதம் மட்டுமே முறைப்பாடுவரை வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மாத்திரம் குறைந்தது 208 பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் பதிவாகியுள்ளதுடன், இது ஆயிரம் வழக்குகளில் ஐந்தில் ஒரு பங்கு என உள்ளூர் உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

மேலும், 2013 முதல் பங்களாதேஷில் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் 23 பேர் தூக்கிலிட்டுள்ளனர் என்பதுடன் இதுவரை ஆயிரத்து 718 பேர் மரண தண்டனையில் உள்ளனர்.

இதேவேளை, பாலியல் துஷ்பிரயோகத்திற்காக மரண தண்டனை அறிமுகப்படுத்தப்படுவதை மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர் என்பதுடன் இது பெண்களுக்கு எதிரான வன்முறையைக் குறைக்காது எனத் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, பங்களாதேஷ் பெண்கள் எதிர்கொள்ளும் பயங்கரமான மிருகத்தனத்தை நிவர்த்திசெய்வதற்கான உண்மையான நடவடிக்கை இல்லாததே இதற்கான காரணம் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.