மதுரையில் புதிதாக 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆயிரத்து 570 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 7 லட்சத்து 14 ஆயிரத்து 235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 75 ஆயிரத்து 518 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி 10 ஆயிரத்து 983 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 27 ஆயிரத்து 734 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது. அந்த வகையில் மதுரையில் தொடக்கத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மதுரையில் நேற்று புதிதாக 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 40 பேர் நகர் பகுதியையும், 17 பேர் புறநகர் பகுதியையும் சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 570 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனாவில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 58 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 550 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில் கொரோனாவால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 72 வயது மூதாட்டி மற்றும் 56 வயது பெண் ஆகியோர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தனர். இதுவரை மதுரையில் கொரோனாவிற்காக 417 பேர் இறந்துள்ளனர்.

பண்டிகை காலங்களை முன்னிட்டு பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்ற அறிவுறுத்தப்படுகின்றனர்.