பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டிய விவகாரத்தில் 6 பேர் கைது

புதுடெல்லி: பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டிய விவகாரத்தில் டெல்லி போலீசார் 100 எப்ஐஆர் பதிவு செய்து 6 பேரை கைது செய்துள்ளனர்.

மோடி ஹட்டாவோ, தேஷ் பச்சோ (மோடியை அகற்றி நாட்டைக் காப்பாற்றுங்கள்) போன்ற முழக்கங்களுடன் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பிரதமர் மோடிக்கு எதிரான போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

இதுகுறித்து, சிறப்பு போலீஸ் கமிஷனர் திபேந்திர பதக் கூறுகையில், ”பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப் பரப்பும் வகையில், நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியதாக, 100 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக, 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆம் ஆத்மி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட வேனை போலீசார் மறித்து சோதனை செய்தனர். வேனில் இருந்து ஆட்சேபனைக்குரிய சுவரொட்டிகள் கைப்பற்றப்பட்டன. அங்கிருந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார் அவர். பத்திரிக்கைச் சட்டம், சொத்துச் சேதம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

இருப்பினும், இந்த சுவரொட்டிகள் அச்சிடப்பட்ட அச்சகம் மற்றும் அதன் உரிமையாளர்கள் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இது குறித்து டெல்லி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.