கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: சிறப்பு பேருந்துகள் இயக்கம்... கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கொரோனா பாதிப்புக்குப் பிறகு, இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை வழக்கமான உற்சாகத்துடனும், தடையின்றியும் கொண்டாடப்படுகிறது.

மேலும், பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோர் வெள்ளிக்கிழமை முதல் பயணத்தை தொடங்குவார்கள். எனவே, பொதுமக்கள் அதிகளவில் வெளியே செல்லலாம் என்பதால் கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி சென்னையில் இருந்து இன்று 300 சிறப்பு பஸ்களும், நாளை மேலும் 300 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதிக பஸ்கள் தேவைப்பட்டாலும், இயக்க போதுமான பஸ்கள் உள்ளன. பயணிகளின் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மற்ற இடங்களில் இருந்து சென்னை திரும்ப போதுமான பஸ்களை இயக்க தயாராக உள்ளோம் என்றனர்.