75 நாட்களுக்குப் பின் பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்

தமிழகத்தில் ஏப். 15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடித் தடைக்காலமாகும். இந்த இரு மாதங்கலும் விசைப்படகில் மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்கு செல்லமாட்டார்கள். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக சமூக இடைவெளி அவசியம் என்பதால் விசைப்படகு மீனவர்கள் மார்ச் 20 முதல் கடலுக்குச் செல்லவில்லை.

இதற்கிடையே, மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக் காலம் ஏப். 15 முதல் மே 31 வரை என 47 நாட்களாகக் குறைத்து மத்திய மீன் வள அமைச்சகம் உத்தரவிட்டது. ஜூன் 1 முதல் மீன்பிடிக்க செல்லலாம் என்று மீனவர்களுக்கு உத்தரவு அளிக்கப்பட்டது.

மே 31-ம் தேதியுடன் மீன்பிடி தடைக்காலம் முடிந்ததால் ஜூன் 1 முதல் சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி பகுதிகளில் விசைப்படகு மீனவர்கள் வங்கக் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.

இதைத்தொடர்ந்து, ராமேஸ்வரம் பாம்பன் விசைப்படகு மீனவர்கள் 75 நாட்களுக்குப் பின் நேற்று காலை மன்னார் வளைகுடா கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். விசைப்படகுகளில் மீன்பிடி உபகரணங்கள், டீசல் கேன்கள், ஐஸ் கட்டிகள் போன்றவற்றை ஏற்றிச் சென்றனர்.