அகமதாபாத் நகரில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 8 பேர் பலி

மருத்துவமனையில் தீ விபத்து... குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

மருத்துவமனையில் இருந்த பல நோயாளிகளை உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள் தற்போது கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டனர். அகமதாபாத் நவ்ரங்புரா பகுதியில் உள்ள ஷ்ரேய் என்ற பெயருடைய இந்த மருத்துவமனையில் அதிகாலை 3 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டதாக கூடுதல் முதன்மை தீயணைப்பு அலுவலர் ராஜேஷ் பட் பிபிசியிடம் தெரிவித்தார்.

மருத்துவப் பாதுகாப்பு உடைகளை அணிந்திருந்த மருத்துவமனை ஊழியர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்குள் செல்லும்போது இந்த தீயில் சிக்கிக்கொண்டனர் என்றும், இந்த தீ மின் கசிவால் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

தீயணைப்பு மற்றும் அவசரகால சேவைத் துறை அந்த இடத்துக்கு உடனே விரைந்தது. தீயணைப்பு வீரர்கள், தண்ணீர் வாகனம், ஹைட்ராலிக் பம்புகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. ஒரு மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது.

ஆனால், இந்த தீயணைப்பு நடவடிக்கையின் போது அவசர சிகிச்சைப் பிரிவில் மாட்டிக் கொண்ட சுமார் 40 நோயாளிகளை தீயணைப்பு வீரர்கள் உள்ளே நுழைந்து சென்று காப்பாற்றினர். காப்பாற்றப்பட்ட நோயாளிகள் அரசு மருத்துவமனையான சர்தார் வல்லபாய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இப்பணியில் ஈடுபட்ட 35 முதல் 40 தீயணைப்பு வீரர்கள், அதிகாரிகள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இதனிடையே விபத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக தூர்தர்ஷன் செய்தி வெளியிட்டுள்ளது.

மருத்துவமனை நிர்வாகத்தின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என்று கூறியுள்ள போலீசார், மருத்துவமனை இயக்குநர் பாரத் மகந்த் என்பவரை கைது செய்துள்ளனர்.