கோகுல்ராஜ் கொலை வழக்கில் 8 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி

சென்னை: ஆயுள் தண்டனை உறுதியானது... சேலம் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதல் குற்றவாளி யுவராஜ் உள்ளிட்ட 8 பேரின் ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

மதுரை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனை தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

வழக்கில் இருந்து ஐந்து பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கோகுல் ராஜின் தாயார் சித்ராவும் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ், விசாரணை நீதிமன்றம் அனைத்து ஆதாரங்களையும் ஆய்வு செய்து தண்டனை வழங்கியதில் பிழை ஏதும் இல்லை என்று குறிப்பிட்டனர்.

யுவராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்வதாகத் தெரிவித்த நீதிபதிகள், யுவராஜ் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் எனவும் கூறினர்.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரபு, கிரிதர் ஆகிய 2 பேருக்கு தண்டனை காலத்தை 5 ஆண்டுகளாக குறைத்து உத்தரவிட்ட நீதிபதிகள், 5 பேரின் விடுதலைக்கு எதிராக கோகுல்ராஜின் தாயார் சித்ரா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தனர்.