சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு 8 திட்டங்கள் அறிவிப்பு

சென்னை: 8 திட்டங்கள் இடம் பிடிப்பு... சென்னை மாநகராட்சியின் 2023 - 2024 ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா ராஜன் தாக்கல் செய்தார். இதில் சுகாதாரத் துறைக்கு மட்டும் 8 திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.

நெகிழி மீதான தடையை தீவிரப்படுத்தும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி சோதனை அடிப்படையில் “மஞ்சப்பை” வழங்கும் திட்டம், சுய உதவி குழுக்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும். பொது மக்களின் வரவேற்பு மற்றும் கருத்துகளின் அடிப்படையில் இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும்.

சுகாதாரத் துறையின் கீழ் நடத்தப்படும் மருத்துவ முகாம்களுக்கு அனைத்து கோட்டங்களுக்கும் கூடாரம், மேஜை மற்றும் நாற்காலி வாடகை முறையில் அமர்த்தி கொள்ள ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கீடு. சுகாதாரத் துறையின் கீழ் பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்களுக்கு நலப்பொருட்களும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மழைக்கவச உடை மற்றும் பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படும். இதற்காக ரூ.18.75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கொசு ஒழிப்பு மற்றும் கொசுப்புழு தடுப்புப் பணிகளைச் செய்யும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும், ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் தரமான Vector Control Kit கொள்முதல் செய்து வழங்கப்படும்.

சென்னை மாநகரில் சுற்றித் திரியும் நாய்களை பிடிப்பதற்கு 6 புதிய வாகனங்கள், ரூ.60 லட்சம் மதிப்பீட்டிலும், மாடுகளை பிடிப்பதற்கு 5 புதிய வாகனங்கள், ரூ.1.35 கோடி மதிப்பீட்டிலும் கொள்முதல் செய்யப்பட்டு உபயோகத்திற்கு கொண்டு வரப்படும். மக்களுக்கு ஏற்படும் நோய் நிலையை மதிப்பிடுவதற்காக தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் (Communicable Disease Hospital) சென்னை மாநகரின் கண்காணிப்பு பிரிவு ஏற்படுத்தப்படும்.

2023-2024-ஆம் நிதியாண்டில், ஷெனாய் நகர் மற்றும் ஆலந்தூர் ஆகிய மண்டலங்களில், ரூ.1 கோடி மதிப்பில் இரண்டு டயாலிசிஸ் மையங்கள் முதற்கட்டமாக 10 இயந்திரங்களுடன் நிறுவப்படும். இவ்வாறு சென்னை மாநகர பட்ஜெட்டில் திட்டங்கள் இடம் பிடித்துள்ளது.