955 துணை பேராசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது... அமைச்சர் தகவல்

சென்னை: அமைச்சர் தகவல்... 9 ஆண்டுகளுக்கு பிறகு 955 துணை பேராசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அமைச்சர் தெரிவித்ததாவது:

அரசுக் கல்லூரிகளில் பணியாற்றி வருகிற உதவிப் பேராசிரியர்களின் பணியை வரன்முறை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். 955 துணை பேராசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருந்தது. இவர்களை பணி நிரந்தரம் செய்வதாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது. ஆனால், பணிநிரந்தரம் செய்யவில்லை. 9 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது.

41 உறுப்பு கல்லூரிகளை ரூ.152 கோடி செலவில் அரசு கல்லூரியாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கான ஆணை நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த கல்லூரிகளில் பணியாற்றிய கௌரவ விரிவுரையாளர்களுக்கு அரசிடமிருந்து ஊதியம் வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

4000 உதவி பேராசிரியர்களை நியமிப்பதற்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தவுள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1030 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பணி ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் வழங்குகிறார்.

பொறியியல் படிப்பிற்கான முதற்கட்ட கலந்தாய்வு முடிந்து விட்டது. இதில் 10,351 பேர் மாணவர்கள் கலந்து கொண்டு உள்ளனர். அதில் 6,009 பேர் கல்லூரிகளில் சேர்ந்து விட்டனர் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.