ஜப்பானில் பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு

ஜப்பான்: பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் வெடிகுண்டு வெடித்தது... ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பங்கேற்ற பொது நிகழ்ச்சியில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை மேற்கு ஜப்பான் பகுதியில் உள்ள வகயாமாவில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு குண்டு வீசியதில் அது வெடித்து புகை கிளம்பியது. உடனடியாக பாதுகாவலர்கள் பிரதமர் கிஷிடாவை சூழ்ந்து கொண்டு அங்கிருந்து அவரை மீட்டு காப்பாற்றி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சேர்த்தனர்.

மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபரை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எவ்வாறாயினும், கைது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் கிஷிடா பாதுகாப்பாக இருப்பதை பாதுகாப்பு அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். உலகின் முன்னணி தலைவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இப்படி ஒரு அசம்பாவித சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜி7 மாநாடு அடுத்த மாதம் ஜப்பானில் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக அச்சுறுத்தும் விதமாக இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபே ஜூலை 2022 இல் பொதுக்கூட்டத்தில் பேசும்போது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நடந்து ஒரு வருடத்திற்குள் ஜப்பான் பிரதமரை குறிவைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் அந்நாட்டில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.