மொரீஷியசில் 3,800 டன் பெட்ரோலுடன் பாறை மீது சரக்கு கப்பல் மோதியது

எம்.வி.வகாஷியோ என்ற சரக்கு கப்பல் 3,800 டன் பெட்ரோலுடன் கடந்த மாதம் 25-ந் தேதி இந்திய பெருங்கடல் தீவு நாடான மொரீஷியஸ் கடலில் பயணித்துக் கொண்டிருந்தது. இந்த கப்பல் ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். மொரீஷியஸ் கடலில் பயணித்துக் கொண்டிருந்தபோது, பாயிண்ட் டி எஸ்னி பகுதியில் எதிர்பாராத விதமாக ஒரு பாறையில் கப்பல் மோதியது.

இந்த மோதலினால் கப்பல் சேதமடைந்து நின்றது. பின்னர் கப்பலில் இருந்த குழுவினர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இருப்பினும் கப்பலில் இருந்த பெட்ரோல் கடலில் கசியத் தொடங்கியது. பெட்ரோல் கசிவதைத் தடுக்க மொரீஷியஸ் அரசு இறங்கியது. மேலும் நாட்டில் சுற்றுச்சூழல் அவசர நிலையை அரசு பிரகடனப்படுத்தியது. இருப்பினும் அரசின் முயற்சிக்கு பெரிதாக பலன் கிடைக்கவில்லை. தற்போது வரை 1,000 டன் பெட்ரோல் கடலில் கசிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் நாட்களில் கப்பல் முழுவதுமாக உடைந்து ஒட்டுமொத்த பெட்ரோலும் கடலில் கலக்கும் அபாயம் உள்ளதால் சுற்றுச்சூழல் வல்லுனர்கள் கவலை அடைந்துள்ளனர். கடலில் கசிந்துள்ள பெட்ரோலை அகற்றுவதற்கான தொழில்நுட்ப வசதிகள் இல்லாததால் பிரான்சிடம் அவசர உதவி கோரி மொரீஷியஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த பெட்ரோல் கசிவினால் மொரீஷியஸ் நாட்டின் கடல்வளம் பாதிக்கப்படும் என அந்நாடு கவலை தெரிவித்துள்ளது. மொரீஷியஸ் நாடு, உணவு மற்றும் சுற்றுலாத்துக்காக அதன் கடல்களை முக்கியமாக சார்ந்துள்ளது. உலகின் மிகப்பழமையான பவளப் பாறைகளும் மொரீஷியஸ் நாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.