ஓய்வில்லாமல் பணியில் ஈடுபடும் போலீசாரின் ஒரு நாள் ஊதியம் திரும்ப வழங்கப்படுகிறது - தமிழக அரசு

முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு காவல் துறை சார்பில் வழங்கப்பட்ட தொகையை திருப்பி தருவது தொடர்பாக தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா தடுப்புப் பணிக்காக தமிழக அரசுக்கு உதவிடும் வகையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களின் ஒரு நாள் ஊதியம் அல்லது அதற்கும் மேலான தொகையை தானாக முன்வந்து முதல்-அமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதனை ஏற்று காவல் துறை சார்பில் ஒரு நாள் ஊதியம் பொதுநிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடுத்த முடிவின் அடிப்படையில், அரசுக்கு தமிழக டி.ஜி.பி. கடிதம் எழுதியிருந்தார். அதில், கொரொனா தடுப்புப் பணியில் ஓய்வில்லாமலும், அர்ப்பணிப்போடும் போலீசார் பணியாற்றி வருவதால், முதல்-அமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு அவர்கள் அளித்த பங்களிப்புத் தொகையை திருப்பித் தரவேண்டும்’ என்று கோரியிருந்தார்.

அதன்படி, போலீசார் மொத்தமாக அளித்திருந்த தொகையான ரூ.8 கோடியே 41 லட்சத்து 37 ஆயிரத்து 286, முதல்-அமைச்சரின் பொதுநிவாரண நிதியில் இருந்து திருப்பி அளிக்கப்படுகிறது. இந்தத் தொகை, சம்பந்தப்பட்ட போலீசாரின் கணக்கில் திருப்பி சேர்க்கப்பட்டுவிட்டதா என்பதை டி.ஜி.பி. உறுதி செய்யவேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.