அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

சென்னை: அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நகர்ந்து தென்மேற்கு அரபிக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அரபிக் கடலில் உருவாக உள்ள புயலுக்கு ‘தேஜ்’ என இந்தியா பரிந்துரைத்த பெயர் சூட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இடையே வடகிழக்கு பருவமழை இன்னும் 2 தினங்களில் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. எனவே இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


இதனை அடுத்து நாளை தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தமிழக உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதைத்தொடர்ந்து வருகிற 22.10.2023 முதல் 26.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.