தமிழ்நாட்டுக்கே பெருமையான தருணம்... முதல்வர் வாழ்த்து

சென்னை: புகழ்வாய்ந்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உலக செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தமிழ்நாட்டுக்கே பெருமையான தருணம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் நிறைவு விழா ஆகஸ்டு 9-ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்நிலையில், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் சென்னையில் நடைபெற்றது. இதில் அர்காடி வோர்கோவிச் சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக 157 ஓட்டுகள் கிடைத்தன. தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஃபிடே துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. விஸ்வநாதன் ஆனந்துக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், புகழ்வாய்ந்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உலக செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தமிழ்நாட்டுக்கே பெருமையான தருணம். கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் போன்ற மாசற்ற நேர்மையும், பரந்த அனுபவமும் கொண்ட ஒருவர் உலக செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவராக இருப்பதால் இந்த விளையாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

உலக செஸ் கூட்டமைப்பின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அர்காடி வோர்கோவிச்சுக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்துவதில் அவருடைய பங்கு இன்றியமையாதது. தலைவராக அவருடைய முதல் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைந்ததை போல இரண்டாவது பதவிகாலமும் அமையும் என நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.