மின்சாரம் பாய்ந்து காட்டு ஆண் யானை பலியானது

மேட்டூர்: மின்சாரம் பாய்ந்து யானை பலி... சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே ஆலமரத்துபட்டி கிராமத்தில் கூழ் கரடுதோட்டம் பகுதி உள்ளது. இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இங்கு விவசாயி புஷ்பநாதன் என்பவரது விவசாய நிலத்தில் வன விலங்குகள் புகுந்து சேதம் விளைவிப்பதை தடுக்க, விவசாய நிலத்தைச் சுற்றி கம்பி கட்டி அதில் சட்ட விரோதமாக மின்சாரத்தை பாய்ச்சி இருந்தார்.

இதில் சென்னம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட வடபருகூர் வனப்பகுதியில் இருந்து வந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை மின்சார கம்பியை மிதித்ததில், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.

இது தொடர்பாக தகவல் அறிந்த மேட்டூர் வனச்சரகர் அறிவழகன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். வருவாய்த் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்தில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். சட்ட விரோதமாக விவசாய நிலத்தில் கம்பி மூலம் மின்சாரம் பார்த்த புஷ்பநாதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.