கள்ளக்குறிச்சி: விசேஷத்திற்கு மளிகை பொருள் வேணும். அதுக்கு முன்னாடி அரிசி மூட்டையை வீட்டில் போட்டுட்டு வந்துவிடுகிறேன் என்று நூதன முறையில் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் சிக்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாதவசேரி கிராமத்தில் கொளஞ்சி என்பவர் வசித்து வருகிறார். இவர் கச்சிராயபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு கொளஞ்சியின் கடைக்கு பைக்கில் வந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் எங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் அரிசி வேண்டும் என கூறியுள்ளார்.
பின்னர் அந்த வாலிபர் கொளஞ்சியிடம் மளிகை பொருட்கள் அடங்கிய துண்டு சீட்டை
கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த சீட்டில் இருந்த மளிகை பொருட்களை தயார்
செய்து கொளஞ்சி ஒரு சாக்கு மூட்டையில் கட்டி லிஸ்டில் இருந்தபடி 3 அரிசி
மூட்டைகளையும் சேர்த்து கொடுத்துள்ளார்.
அப்போது அரிசி மூட்டைகளை
கொடுத்தால் வீட்டிற்கு கொண்டு சென்று கொடுத்துவிட்டு பணத்தை எடுத்து
வருகிறேன் என வாலிபர் கூறியுள்ளார். அதனை நம்பி கொளஞ்சி வாலிபரிடம் அரிசி
மூட்டைகளை மட்டும் கொடுத்துள்ளார்.
அதனை வாங்கி சென்ற வாலிபர் நீண்ட
நேரமாகியும் திரும்பி வராததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து கொளஞ்சி
அதிர்ச்சியடைந்தார். இந்நிலையில் மாதவச்சேரி பகுதியில் கொளஞ்சி சென்ற போது
பைக்கில் அதே வாலிபர் வருவதை கண்டு அவரை மடக்கி பிடித்து கச்சராபாளையம்
காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதனையடுத்து போலீசார் நடத்திய
விசாரணையில், அந்த வாலிபர் இதே போல் 3 பேரிடம் கைவரிசை காட்டியது
தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.