தமிழகத்தில் 37.81 லட்சம் வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண்கள் இணைப்பு

சென்னை: ஆதார் எண் இணைப்பு... ''தமிழகத்தில் 37.81 லட்சம் வாக்காளர்கள் தங்களின் ஆதார் எண்களை வாக்காளர் அடையாள அட்டையில் இணைக்க பதிவு செய்துள்ளனர்'' என தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

தமிழகம் முழுதும் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி இம்மாதம் முதல் தேதி துவங்கியது. ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களின் ஆதார் எண்களை சேகரித்து வருகின்றனர்.

இப்பணி 2023 மார்ச் 31 வரை நடக்க உள்ளது. ஓட்டுச்சாவடி அலுவலரிடம் ஆதார் எண் வழங்க முடியாதவர்கள் www.nvsp.in என்ற இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்யலாம். இது தவிர 'Voter Help Line' எனும் செயலி வழியாகவும் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்யலாம்.

இது தொடர்பாக தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியதாவது: தமிழகம் முழுதும் இதுவரை 37 லட்சத்து 81 ஆயிரத்து 498 பேர் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் சேர்க்க பதிவு செய்துள்ளனர். இது 6.08 சதவீத அளவு.இவர்களில் 90 சதவீதம் பேர் ஓட்டுச்சாவடி அலுவலர் வழியாக பதிவு செய்துள்ளனர். மீதம் 10 சதவீதம் பேர் ஆன்லைன் மற்றும் செயலி வழியாக பதிவு செய்துள்ளனர்.

அதிகபட்சமாக அரியலுார், பெரம்பலுார், விருதுநகர் மாவட்டங்களில் 20 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் ஆதார் எண்களை வழங்கி உள்ளனர்.

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறோம். துண்டுப் பிரசுரங்கள் அச்சிட்டு வீடுகளில் வினியோகம் செய்யப்படுவதுடன் போஸ்டர்கள் அச்சிட்டு ஒட்டப்படுகின்றன.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நவம்பரில் நடக்க உள்ளது. அப்போது சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். சிறப்பு முகாமில் ஆதார் எண் பெற படிவங்கள் வழங்கப்படும். அப்போது அதிகம் பேர் வழங்குவர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சட்டசபை தேர்தல் பணி செய்தது தொடர்பாக 20 மாவட்டங்களுக்கு இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளதே என கேட்டதற்கு ''தவறான தகவல். ஒரு சில மாவட்டங்களுக்கு மட்டும் சில சந்தேகங்கள் காரணமாக நிதி ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டது.''பெரும்பாலான மாவட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு பணம் வினியோகம் முடிந்து விட்டது'' என்றார்.