ஊழலை ஒழிப்பதற்கு யார் அரசியலுக்கு வந்தாலும் வரவேற்கிறோம்- ஆம் ஆத்மி கட்சி

ஊழலை ஒழிக்க வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சி சார்பில் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த யாத்திரை புதுக்கோட்டை வந்தது. அப்போது கட்சியின் மாநில தலைவர் வசீகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற சட்டசபை தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் ஆம் ஆத்மி கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தேர்தல் பிரசாரத்துக்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழகம் வருகிறார்.

ஊழலை ஒழிப்பதற்காக யார் அரசியலுக்கு வந்தாலும் வரவேற்கிறோம். தமிழக அரசு தற்போது தொடங்கியுள்ள மினி கிளினிக் திட்டத்தை ஏற்கனவே டெல்லியில் கெஜ்ரிவால் தொடங்கி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

தமிழக அரசும் இந்த திட்டத்தை தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் செயல்படாமல் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களையும் செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.