350 ஆன்லைன் படிப்புகளை நிறைவு செய்து சாதனைப்படைத்த மாணவி

90 நாட்களில் உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் சுமார் 350 ஆன்லைன் படிப்புகளை நிறைவு செய்து உலக சாதனை படைத்துள்ளார் கேரளாவை சேர்ந்த மாணவி ஒருவர்.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் திறக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால், ஆன்லைன் வழி கல்வியே மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கேரளாவைச் சேர்ந்த ரகுநாம் மற்றும் கலாதேவி என்ற தம்பதியின் மகள் ஆரத்தி, கல்வியில் யாரும் எளிதில் செய்து விட முடியாத உலக சாதனையை படைத்துள்ளார். கல்லூரி 2ம் ஆண்டு படித்து வரும் இவர், கொரோனா ஊரடங்கு காலமான கடந்த 3 மாதத்தை பயனுள்ளதாக போக்கியுள்ளார்.

அதாவது, இந்த 90 நாட்களில், உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் சுமார் 350 ஆன்லைன் படிப்புகளை நிறைவு செய்து உலக சாதனை படைத்துள்ளார். இது தொடர்பாக மாணவி ஆரத்தி கூறுகையில், “இந்த ஆன்லைன் கல்வி உலகத்தை எனது கல்லூரி ஆசிரியர் ஒருவர்தான் எனக்கு காட்டினார். அதில் ஏராளமான படிப்புகள் உள்ளன. காலநேரமும், பாடத்திட்டமும் வேறுபாடு கொண்டவை. எனது கல்லூரி ஆசிரியர்கள்தான் எனக்கு உதவிகரமாக இருந்தனர்,” எனக் கூறினார்.

உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு ஆன்லைன் வழிக்கல்வி மிகவும் கடினமானது இல்லை, மாணவர்கள் துணிந்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை மாணவி ஆரத்தி உணர்த்தியுள்ளார்.