டிசம்பர் 15-ந் தேதிக்குள் டாஸ்மாக் பார்களை திறப்பதற்கு நடவடிக்கை

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபார்கள் கடந்த எட்டு மாதங்களாக மூடிக்கிடக்கின்றன. இதன் காரணமாக பார் உரிமையாளர்கள் கடும் வருவாய் இழப்பை சந்தித்துள்ளனர். பார் கட்டிடங்களுக்கு வாடகை செலுத்த முடியாமலும் தவித்து வருகிறார்கள். இந்த வாடகை பாக்கி மட்டுமே ரூ.405 கோடிக்கு உள்ளது.

இதையடுத்து டாஸ்மாக் பார்களை திறக்க வேண்டும் என்று பார் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் அன்பரசன் மற்றும் நிர்வாகிகள் பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் டாஸ்மாக் பார்களை மட்டும் தொடர்ந்து மூடி வைத்திருப்பது தங்களுக்கு கடுமையான இழப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர்கள் கூறி இருந்தனர்.

இதுதொடர்பாக பார் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு பேட்டி அளித்த நிர்வாகிகள், மதுபார்களை திறப்பதற்கு உடனடியாக அனுமதிக்காவிட்டால், பார் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்து இருந்தனர். இதனை தொடர்ந்து டாஸ்மாக் மேலாண் இயக்குனர் மோகன், டாஸ்மாக் பார் உரிமையாளர்களை போனில் அழைத்து பேசினார்.

மேலும் வருகிற டிசம்பர் 15-ந் தேதிக்குள் டாஸ்மாக் பார்களை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். அதின்படி வருகிற 15-ந் தேதி தமிழகம் முழுவதும் உள்ள 3,250 டாஸ்மாக் பார்களையும் திறப்பதற்கு அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.