உணவு பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை

கனடா: மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை... கனடாவில் உணவுப்பொருட்களின் விலைகள் பாரியளவில் தொடர்ந்தும் அதிகரித்துச் செல்லும் நிலையில், மக்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கனடாவின் முதனிலை மளிகைப் பொருள் விற்பனை நிறுவனமான லொப்லோவ் (Loblaw) இவ்வாறு பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதி வரையில் சுமார் 1500 பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் சராசரியாக உணவுப் பொருட்களின் விலைகள் 10 வீதமாக உயர்வடைந்துள்ளது என நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி காலேன் வெஸ்டன் தெரிவித்துள்ளார்.

உணவு விநியோகஸ்தர்கள் விலைகளை அதிகரிப்பதனால் தமது நிறுவனம் கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதாகத் தெரிவித்துள்ளார்.


எனினும் அநீதியான முறையில் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு இடமளிக்கப்படாது எனவும், பெரும் எண்ணிக்கையிலான பொருட்களின் விலைகள் ஜனவரி வரையில் அதிகரிக்கப்படாது எனவும் நிறுவனம் உறுதிமொழி வழங்கியுள்ளது.

பொருட்களின் விலைகள் உயர்த்தப்படாது என்ற உறுதிமொழி பல கனேடியர்களுக்கு நன்மை பயக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனடாவில் உணவு பணவீக்கம் இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.