சசிகலாவை சிறையில் இருந்து விடுவிக்க நடவடிக்கை... வக்கீல் தகவல்

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது. இந்த தண்டனையை அப்படியே முழுமையாக சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் தண்டனை காலம் அடுத்த ஆண்டு(2021) பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது.

இதற்கிடையே அபராத தொகையை செலுத்தினால் சசிகலா வருகிற ஜனவரி 27-ந் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று சிறை நிர்வாகம் தெரிவித்தது. இந்தநிலையில் சசிகலா தரப்பில் அவர் செலுத்த வேண்டிய அபராத தொகையான ரூ.10 கோடியே 10 ஆயிரத்துக்கு வங்கி வரைவோலை பெங்களூரு தனிக்கோர்ட்டில் செலுத்தப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட தனிக்கோர்ட்டு, அபராதம் செலுத்தப்பட்டது குறித்து பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, சசிகலாவை சிறையில் இருந்து விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை அவரது வக்கீல்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியதாவது:-

சசிகலாவை பொறுத்தமட்டில் ஜனவரி 27-ந் தேதி விடுவிக்கப்படுவார் என்று ஏற்கனவே தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கர்நாடக சிறைத்துறை அறிவித்துள்ளது. இதன்படி, பார்த்தால் இன்னும் 68 நாட்கள் மட்டுமே சசிகலா சிறையில் இருக்க வேண்டியது உள்ளது. சசிகலாவை பொறுத்தமட்டில் நன்னடத்தை விதிகளின் கீழ் அவருக்கு 129 நாட்கள் சலுகை உள்ளது.

ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் இருந்தவர்களுக்கு கர்நாடக மாநில சிறைத்துறை சலுகை வழங்கியது குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட ஆதாரங்களை தாக்கல் செய்துள்ளோம். அதுமட்டுமல்லாமல் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றவர்களுக்கு சலுகை வழங்குவதில் எந்த தடையும் இல்லை என்றும், மாநில அரசு உரிய முடிவெடுக்கலாம் என்றும் உள்துறை அளித்த பதில் கடிதத்தையும் ஆதாரமாக அளித்துள்ளோம்.

அதேபோன்று, சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்த தீர்ப்புகளில் கூட தண்டனை காலம் குறைக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளோம். இதையெல்லாம் பரிசீலித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.