அதிகாலை காட்சி இல்லாவிட்டாலும் தமிழகத்தில் ஜெயிலர் படத்திற்கு முன்பதிவு முடிஞ்சிடுச்சாம்

சென்னை: ஜெயிலர் படம் பெங்களூருவில் காலை 6 மணிக்கும், ஐதராபாத்தில் காலை 8 மணிக்கும், கேரளாவில் காலை 6 மணிக்கும் சிறப்புக் காட்சிகள் நடைபெற உள்ளன. இதனால் தமிழக ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். இருப்பினும் முன்பதிவு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது காலை சிறப்புக் காட்சிகள், அதிகாலை சிறப்புக் காட்சிகள், நடு இரவுக் காட்சிகள் என நடந்தது.

ஆனால், இந்த வருடப் பொங்கலுக்கு வெளியான 'வாரிசு, துணிவு' ஆகிய படங்களுக்கு அரசிடம் அனுமதி பெறாமல் அதிகாலை சிறப்புக் காட்சிகளை நடத்தியதாக சர்ச்சை எழுந்தது. அதன்பின் வெளியான படங்களுக்கு அதிகாலை காட்சிகளை நடத்த அனுமதி வழங்கவில்லை. காலை 8 மணி அல்லது 9 மணிக்கே காட்சிகள் ஆரம்பமாகி நடந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் இப்படியான அதிகாலை காட்சிகளை பரபரப்பு ஆக்கியவர்களில் ரஜினிகாந்த் முதன்மையானவர். அவருடைய படங்களை முதல் காட்சியில் பார்ப்பதற்கு பலரும் விரும்புவார்கள். இந்நிலையில் அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு தற்போது அனுமதி வழங்கப்படாத காரணத்தால் ஆகஸ்ட் 10 வெளியாகும் 'ஜெயிலர்' படத்திற்கான காட்சிகள் காலை 9 மணிக்குதான் ஆரம்பமாகின்றன.

தமிழகத்தில் மட்டும்தான் இந்த நிலை. அதே சமயம் பெங்களூருவில் காலை 6 மணிக்கும், ஐதராபாத்தில் காலை 8 மணிக்கும், கேரளாவில் காலை 6 மணிக்கும் சிறப்புக் காட்சிகள் நடைபெற உள்ளன.

தமிழகத்தில் உள்ள ரஜினி ரசிகர்களுக்கு இது கடும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 10ம் தேதி தமிழில் வேறு எந்தப் படங்களும் வரவில்லை. 'ஜெயிலர்' படத்தில் ரஜினிகாந்த் தவிர மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், சுனில், என மற்ற மொழி நடிகர்களும் உள்ளதால் தென்னிந்திய அளவில் நல்ல முன்பதிவு இருந்து வருகிறது. முதல் நான்கு நாட்களுக்கு பெரும்பாலான காட்சிகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

தனது முந்தைய படங்களின் ஓபனிங் வசூலை இந்தப் படத்தில் ரஜினிகாந்த் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.