மேற்கு வங்காளத்தை புரட்டி போட்ட அம்பன் புயல்: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை அறிவிப்பு

தெற்கு வங்கக்கடலில் உருவான அம்பன் புயல் மேற்கு வங்காளத்தின் திகா கடற்கரை மற்றும் வங்காளதேசத்தின் ஹட்டியா தீவுகளுக்கு இடையே சுந்தரவன காடுகள் பகுதியில் கரையை கடந்தது. புயல் கரையை கடந்தபோது சூறாவளி காற்று வீசியது. பலத்த மழையும் கொட்டியது.

இந்த புயலால் மேற்கு வங்காளத்தின் வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மற்றும் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.

மாநிலத்தில் உள்ள பல மாவட்டங்களின் தெருக்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டன. மரங்கள் வேரோடு சாய்ந்தன. கடுமையான காற்று மற்றும் கனமழையால் வீடுகளும் சேதமடைந்தன. வாகனங்கள், வீடுகளின் மேற்கூரைகள் மீதும் மரங்கள் விழுந்து பெருத்த பாதிப்பினை ஏற்படுத்தியிருந்தன.

நேற்றைய நிலவரப்படி 5500-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்த நிலையில், அம்பன் புயலுக்கு இதுவரை 72 பேர் பலியாகி உள்ளனர்.

புயல் பாதிப்பை தொடர்ந்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி நடத்தினார். அதன்பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய இரு மாவட்டங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளன. அவற்றை மீண்டும் கட்டமைக்க வேண்டும். மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என மத்திய அரசை நான் வலியுறுத்துவேன். புயலில் சிக்கி உயிரிழந்தோர் ஒவ்வொருவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ரூ.2 முதல் ரூ.2.5 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.