இலங்கையின் உயர்தர சுற்றுலாத்துறைகளில் முதலீடு செய்ய வேண்டுகோள்

கொழும்பு: இலங்கையில் முதலீடுகள் மேற்கொள்ளுங்கள் என்று மாலைதீவு உப ஜனாதிபதி பைசல் நசீம் உடனான சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்தார்.

மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைக் கருத்தில் கொண்டு, – இலங்கையின் உயர் தொழில்நுட்ப விவசாயத் துறை, கப்பல் சுற்றுலா மற்றும் உயர்தர சுற்றுலாத் துறைகளில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்தார்.

காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு இலங்கையுடன் கைகோர்க்குமாறும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

இந்த பிராந்தியத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்தும் இருவரும் கலந்துரையாடியதுடன், போதைப்பொருளுக்கு எதிராகப் போராடுவதற்கு மாலைதீவின் உதவியையும் ஜனாதிபதி கோரினார்.