உஜ்வாலா யோஜனா திட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்படும் என்று அறிவிப்பு


இந்தியா: இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு உஜ்வாலா யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தில் உள்ளவர்களுக்கு இலவசமாக சிலிண்டர் இணைப்பு வழங்கப்படுவதுடன் அரசு சார்பாக மாதந்தோறும் மானியத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் மானியத் தொகை வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் நபர்கள் பட்டியலினம், பழங்குடியினம், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள், தேயிலை தோட்ட பெண் பணியாளர்கள், தீவுகளில் வசிக்கக் கூடியவர்கள் போன்றோர் பயன் பெறலாம். அத்துடன் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் வீட்டில் வேறு யார் பெயரிலும் சிலிண்டர் இணைப்பு பெற்றிருக்கக்கூடாது. இத்திட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காரணமாக மானிய தொகை வழங்கப்படவில்லை. இதனையடுத்து இந்த திட்டத்தில் உள்ளவர்களுக்கு கடந்த மே 21ஆம் தேதி அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பில், பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தில் உள்ள 12 கோடி பயனாளிகளுக்கு இந்த ஆண்டு மாதந்தோறும் ரூ.200 மானியத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்காக அரசுக்கு ரூ.6,100 கோடி வரை செலவு ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதன்படி தற்போது 14.2 கிலோ கொண்ட வீட்டு பயன்பாடு சிலிண்டர் ரூ.1003 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து உஜ்வாலா திட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு ரூ. 200 மானியத்தொகை வழங்கப்படும் என்பதால் இவர்களுக்கு சிலிண்டரின் விலை ரூ.803 ஆக குறைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.