மதுரை மாநகர போலீசில் மேலும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பலி

மதுரை மாநகர போலீசில் மேலும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருபவர் சந்தானபாண்டியன்(வயது 56). இவருக்கு கடந்த வாரம் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதை தொடர்ந்து அவருக்கு மூச்சுதிணறல் அதிகமானதை தொடர்ந்து நரிமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் சந்தானபாண்டியனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்தநிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மதியம் சந்தானபாண்டியன் பரிதாபமாக இறந்தார். அதை தொடர்ந்து அவரது இறுதிச்சடங்கு காவல்துறையின் முழு மரியாதையுடன் நடந்தது. இறந்த சந்தானபாண்டியனின் மனைவி சாந்தா. இவர் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் 1988-ம் ஆண்டு போலீசில் சேர்ந்தார். சி.பி.சி.ஐ.டி.யில் பணிபுரிந்த இவர் கடந்த மே மாதம்தான் மதுரை சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலையத்தில் சட்டம், ஒழுங்கு பிரிவுக்கு மாறுதலாகி வந்தார். மதுரை மாநகர போலீசில் சந்தானபாண்டியன் உள்ளிட்ட 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.