சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள்உயர்வு ..நிரப்ப மாநகராட்சி உரிய நடவடிக்கை

சென்னை : தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பேரிடரால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் ஏராளமானோர் தங்களது வாழ்வாதாரம் மிகவும் இழந்து பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் அதிக கல்வி கட்டணம் செலுத்தி தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

அதனால் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க தொடங்கினர். இந்த நேரத்தில் அரசும் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியது.

இதனால் இதன் விளைவாக 2022 – 2023 ம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை எதிர்பாராத அளவு அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி கொண்டு வருகிறது. இது மாணவர்களின் கற்றல் கற்பித்தலில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதை சரி செய்ய பள்ளிக்கல்வித்துறை தற்காலிக ஆசிரியர்களை பணியமர்த்த முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மற்ற மாவட்டங்களை தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் 281 பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது.

மேலும் இந்த ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்கும் வகையில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதல் கட்டமாக 500 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கான சம்பளத்தை கல்வி நிலைக்குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆலோசித்து முடிவெடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிக்கும் நோக்கில் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.