பாகிஸ்தானில் மதநிந்தனை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்திலேயே சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் மதநிந்தனை செய்ததாக தாகிர் நசீம் என்பவர் கைது செய்யப்பட்டார். இஸ்லாமின் கடைசி தீர்க்கதரிசி என அவர் கூறியதால் அவருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில், கடுமையான மத நிந்தனை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் அவருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. நீதிமன்றத்தில் இதுகுறித்த விசாரணை நடைபெற்றபோது, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் பெஷாவர் நீதிமன்றத்தில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தாகீர் நசீம் ஆஜர்டுத்தப்பட்டார். விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், பார்வையாளர்கள் பகுதியில் இருந்த ஒரு நபர், திடீரென எழுந்து துப்பாக்கியால் தாகிர் நசீமை நோக்கி சரமாரியாக சுட்டு கொன்றார். நீதிபதி முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன்பின், துப்பாக்கியால் சுட்ட அந்த நபரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயர் பாதுகாப்பு நிறைந்த நீதிமன்ற அறைக்குள் அவர் எப்படி துப்பாக்கியை கொண்டு வந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுட்டுக்கொல்லப்பட்டவர் அமெரிக்க குடிமகன் என்பதால், அவரின் குடும்பத்திற்கு அமெரிக்க வெறியுறவுத்துறை இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும், அவரை சுட்டுக்கொன்ற குற்றவாளி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், இதுபோன்ற மோசமான சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்கவும், பாகிஸ்தான் அரசு சட்டத்தில் சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என அமெரிக்க வெறியுறவுத்துறை வலியுறுத்தியுள்ளது.