நடிகரும், இயக்குனருமான பார்த்திபனின் ஒத்த செருப்பு படம் சிறந்த பிராந்திய மொழி திரைப்படத்திற்கான விருதை பெற்றுள்ளது.
புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இத்திரைப்பட விழா இந்தியாவிலேயே புதுவையில் மட்டும்தான் 37 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடப்பாண்டுக்கான திரைப்பட விழா டிசம்பர் 15-ம் தேதி அலையன்ஸ் பிரான்சிஸ் அரங்கில் நடைபெறுகிறது.
மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்களைத் தேர்வு செய்து திரைப்பட
விழாவை நடத்துகிறது. புதுவை அரசு அத்திரைப்படங்களில் சிறந்த பிராந்திய மொழி
திரைப்படத்தைத் தேர்வு செய்து விருது வழங்குகிறது. 2019ல் சிறந்த
திரைப்படமாக இயக்குநர் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ தேர்வு
செய்யப்பட்டுள்ளது.
சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான இந்த விருதினை
இயக்குநர் பார்த்திபனுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வரும் 15-ம்
தேதி நடைபெறும் விழாவில் வழங்குகிறார். விருதுக்கான பாராட்டுப்
பத்திரத்துடன் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் விழாவில் தரப்படவுள்ளதாக
அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.