பவானி சாகர் அணை தொடர்ந்து இன்று 13-வது நாளாக 102 அடியில் இருந்து வருகிறது

ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வந்தது. எனவே இதன் காரணமாக கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பியது. அங்கிருந்து உபரி நீர் முழுவதும் அப்படியே பவானிசாகர் அணைக்கு வருகிறது.

எனவே இதன் காரணமாக கடந்த 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டது.

இதை தொடர்ந்து முதலில் பவானி சாகர் அணையில் இருந்து 25 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. இதன் காரணமாக அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைய தொடங்கியது.

மேலும் பவானி சாகர் அணை தொடர்ந்து இன்று 13-வது நாளாக 102 அடியில் இருந்து கொண்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியில் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3600 கன அடியாக குறைந்து உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காகவும், பாசனத்திற்காகவும் 3,600 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.