ராகிணி திவேதி போதைப்பொருள் வழக்கில் கைதாகியுள்ளதால் கட்சியில் சேர்க்க பாஜக தலைவர்களுக்கு விருப்பம் இல்லை என தகவல்

போதைப்பொருளை பயன்படுத்தியது மற்றும் போதைப்பொருட்கள் விற்கும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக, கன்னட நடிகை ராகிணி திவேதியை கடந்த 4-ந் தேதி கைது செய்யப்பட்டார். இதே விவகாரத்தில் இன்னொரு கன்னட நடிகை சஞ்சனா கல்ராணியும் கைது செய்யப்பட்டு, தற்போது இருவரிடமும் சித்தாப்புராவில் உள்ள பெண்கள் பாதுகாப்பு மையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை ராகிணி திவேதி கர்நாடக பா.ஜனதாவில் இணைய முயன்றதாகவும், இதற்காக அவர் பா.ஜனதா தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருந்த ராகிணி திவேதிக்கு கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் குறைந்து உள்ளதால், அவர் அரசியலில் குதிக்க முடிவு செய்து கர்நாடக பா.ஜனதா கட்சியில் இணைய முடிவெடுத்துள்ளார்.

கர்நாடக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ், துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், மந்திரி அசோக், அரவிந்த் லிம்பாவளி எம்.எல்.ஏ. ஆகியோருடன் அவர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு இடைத்தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட நாராயணகவுடாவுக்கு ஆதரவாக நடிகை ராகிணி திவேதி பிரசாரத்திலும் ஈடுபட்டு இருந்தார். கொரோனா ஊரடங்கு நேரத்தில் தனது வீட்டிலேயே சமையல் செய்து தெருவில் வசிப்பவர்களுக்கு ராகிணி திவேதி கொடுத்து வந்தார். ராகிணி திவேதியின் சேவையை பார்த்து அவரை பா.ஜனதாவில் சேர்த்து கொள்ள தலைவர்கள் முடிவு செய்து இருந்தனர்.

தற்போது, போதைப்பொருள் விவகாரத்தில் ராகிணி திவேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். பா.ஜனதாவுக்கு ஆதரவாக ராகிணி பிரசாரம் செய்ததால் அவர் பா.ஜனதாவை சேர்ந்தவர் என்று குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இதை முற்றிலும் மறுத்த பா.ஜனதா தலைவர்கள், பா.ஜனதாவுக்கும், ராகிணி திவேதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். இதன்மூலம் ராகிணி திவேதியை பா.ஜனதா கைவிட்டுள்ளது. இதனால் அவரது அரசியல் ஆசையும் கலைந்துவிட்டது.