ஆந்திராவில் இன்று காலை முதல் பஸ் போக்குவரத்து தொடங்கியது!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மே-31ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால்,4-வது கட்ட ஊரடங்கில் மத்திய அரசு பல தளர்வுகளை அறிவித்தது. இதைத் தொடர்ந்து ஆந்திராவில் பஸ்களை இயக்க மாநில அரசு முடிவெடுத்தது. அதன்படி ஆந்திராவில் இன்று காலை 6 மணிக்கு பஸ் போக்குவரத்து தொடங்கியது. மாநிலம் முழுவதும் 1683 பஸ்கள் 436 வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.

திருப்பதியிலிருந்து மாவட்டத்திற்குள் 191 பஸ்கள் 22 வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் திருப்பதியிலிருந்து சித்தூர், பீலேர், மதனப்பள்ளி, குப்பம், நகரி, புத்தூர், பலமனேர் என மாவட்டத்திற்குள் வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. விஜயவாடாவில் இருந்து மாவட்ட தலைநகரங்களான சித்தூர், கடப்பா, நெல்லூருக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. பஸ்கள் இடையில் எந்த ஊர்களிலும் நிற்காது.

10 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் பஸ்களில் பயணம் செய்ய அனுமதியில்லை. 50 சதவீத பயணிகள் மட்டுமே பஸ்களில் அனுமதிக்கப்படுகின்றனர். காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே பஸ் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படவில்லை, சாதாரண கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் சிவப்பு மண்டலங்களில் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதேபோல் திருப்பதியில் இருந்து திருமலைக்கும் பஸ் போக்குவரத்து தொடங்கப்படவில்லை.