உதவிக்கு வாங்க... மொரிஷியஸ் அழைப்பையேற்று இந்திய கடலோர காவல்படை விரைவு

எண்ணெய் படலத்தை அகற்ற உதவும் நோக்கத்தில் இந்திய கடலோர காவல்படை மொரிஷியஸ் விரைந்துள்ளது.

மொரிஷியஸ் கடல் பகுதியில் கொட்டியுள்ள எண்ணெய் படலத்தை அகற்றும் பணிக்காக இந்திய கடலோரக் காவல் படையினர் அங்கு விரைந்துள்ளனர்.

இதுகுறித்து கடலோரக் காவல்படை வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய கடலோர காவல்படை மாசுபாட்டுக் குழு மொரீஷியஸுடன் ஒருங்கிணைந்து, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்கள் மற்றும் குழுக்களுடன் இணைந்து செயல்படப் போவதாகத் தெரிவித்துள்ளது.

மேலும் எண்ணெய் படலத்தை அகற்ற ரிவர் பூம்ஸ், ஸ்கிம்மர்கள் உள்ளிட்ட மாசுக்கட்டுப்பாட்டுக் கருவிகள் பயன்படுத்தப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக ஜப்பானிய எண்ணெய் கப்பலான எம்.வி.வகாஷியோ மொரிஷியஸ் கடல் பகுதியில் சென்ற போது பவளப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானதில் கப்பலில் இருந்த ஆயிரத்து 100 டன் எண்ணெய் கடலில் கொட்டியது நினைவிருக்கலாம். இதனை அகற்றவே இந்தியாவின் உதவியை மொரிஷியஸ் நாடியுள்ளது.