எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை படகுடன் சிறை பிடியுங்கள்; அமைச்சரின் சர்ச்சை பேச்சு

சர்ச்சை பேச்சு... எல்லைதாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை படகுடன் சிறைபிடியுங்கள் என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சர்ச்சைக்குரிய முறையில் பேசியுள்ளார்.

எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் அடிக்கடி தமிழக மீனவர்களை சிறைபிடித்து வருகின்றனர்.கடந்த சில நாட்களுக்கு கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 4 விசைப்படகுகளையும், 29 மீனவர்களையும் சுற்றிவளைத்து, எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டும் ,பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய அரசு தொடர்ந்து இலங்கையிடம் வலியுறுத்தி வருகிறது.

இந்தநிலையில், இலங்கை பருத்தித்துறையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களுடன் கலந்துரையாடியபோது சர்சைக்குரிய முறையில் பேசியுள்ளார்.அப்பொழுது அவர் கூறியதாவது:

எல்லைதாண்டி வரும் இந்திய மீனவர்களின் படகுகளை சிறைபிடித்து கொண்டு வாருங்கள். இல்லையென்றால் படகுகளின் எண்களையாவது கொண்டு வாருங்கள்.அந்த இந்திய மீனவர்களின் படகுகளை என்னிடம் ஒப்படையுங்கள்.அப்பொழுது வரும் பிரச்சினையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று பேசியுள்ளார்.