சீனாவில் சரக்கு கப்பலுடன் எண்ணெய் கப்பல் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவின் ஷாங்காய் நகருக்கு கிழக்கே மஞ்சள் கடலில் 3 ஆயிரம் டன் பெட்ரோலை ஏற்றிக்கொண்டு பயணித்த எண்ணெய் கப்பல் யாங்ட்சி நதி முகத்துவாரம் அருகே சென்றபோது, மணல் மற்றும் ஜல்லி ஏற்றி வந்த சரக்கு கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து எண்ணெய் கப்பல் தீ பிடித்து எரிந்தது. இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
15 கப்பல்கள் மற்றும் 2 விமானங்கள் இந்த மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு
வருகின்றன. இந்த விபத்தில் 14 கடற்படையினர் மாயமான நிலையில் 3 கடற்படையினர்
மாத்திரம் மீட்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பல மணி நேர
போராட்டத்துக்கு பின்னர், நேற்று காலை எண்ணெய் கப்பலில் தீ முழுவதுமாக
அணைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீட்பு குழுவினர் மாயமான கடற்படையினரைத்
தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதில் எண்ணெய் கப்பலில் இருந்து 8
கடற்படையினரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இன்னும் 6 கடற்படையினர்
மாயமாகியுள்ளனர்.
அவர்களை தேடும் பணிகள் தொடர்ச்சியாக
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விபத்துக்கான காரணம் குறித்து கண்டறிய
தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.