இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: இன்று தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக குமரிக்கடல் பகுதிகளில் நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மேலும் வலுவிழக்கக்கூடும் என்றும் இதன் காரணமாக, இன்று தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும், சென்னை மற்றும் புறநகரில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ள வானிலை மையம், அரபிக்கடல், குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது.