தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஒரு சில இடங்களில் பெய்து வருகிறது. ஆனாலும் பெரும்பாலான மாவட்டங்களில் கடும் வெயில் நிலவி வரும் நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

வெப்பச்சலனம் காரணமாக கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. எஞ்சிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் வரும் 16-ந் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.