தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு ..... வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, 'மாண்டஸ்' புயலாக வலுப்பெற்றது. சென்னை, தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இதையடுத்து இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக இன்று புயலாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. எனவே அதன்படி, தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நள்ளிரவு புயலாக வலுப்பெற்றுள்ளது.

இதனை அடுத்து இப்புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது. புயல் தற்போது காரைக்காலில் இருந்து 560 கி.மீ. தூரத்திலும், சென்னையில் இருந்து 640 கி.மீ. தூரத்திலும் புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.